ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

எங்கே சென்று விடுவாய் என்னைத் தவிர்த்துவிட்டு?




என் உதட்டின் கடைசிப் புன்னகை
என் கண்களின் மிக நீண்ட கண்ணீர்
இரண்டுமே நீ கொடுத்தவை!

என்னை விட்டு விலகுவதாக நினைத்து
ஓடிக் கொண்டேயிருக்கிறாய்...

வானமாய் என் அன்பை
விரித்து வைத்திருக்கிறேன்..

எங்கே சென்று விடுவாய்
என்னைத் தவிர்த்துவிட்டு?


நீயில்லாத நாளில்...



நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....

நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...

நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்

முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...

உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..

உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.

ஒருவேளை...

உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...

தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே

மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே....

உன்னை இழந்ததற்கு பதிலாய் உயிரை இழந்திருக்கலாம்




நீயும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....

நாம் பேசிச் சிரித்த
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?

யாருக்குத் தெரியும்?
சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு
நம்மைப் பற்றியதாகக்கூட
இருக்கலாம்!

உண்மை சொல்!

உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?

உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்....

அய்யோ!

உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிறது!


உன் நினைவுகள்!




உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

கவிதைகள்




இதை நீ படிக்கும்
நொடியில்
நான்
எங்கு இருப்பேன்
என்றறியாவிட்டாலும்,
நிச்சயமாய்
ஒன்று மட்டும்,
இப்பொழுதுகூட
நீ
என் இதயத்தில்தான்
இருக்கிறாய்
..!

*

இப்பொழுதே
என்னை காதலித்துவிடு,
இல்லையென்றால்
அடுத்த ஜென்மத்தில்,
இதற்கும் சேர்த்து
நிறைய
காதலிக்க
வேண்டியிருக்கும்..!


*

பழைய பள்ளிக்கூட
புகைப்படத்தில்,
இன்னும்
புதிதாகவே
இருக்கிறது
முதல்
காதலின் நினைவு..!

அன்றும் இன்றும் என்றும்
புதிதாகவே
இருக்கும்
அந்த முதல் நினைவு

*

நீ என்னுடன்
பேசிச்சென்றதை,
ஒட்டுக்கேட்டு விட்டு
அதை சத்தமாய்
சொல்லிக்கொண்டிருக்கிறது
- காலி வகுப்பறை..!

"எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை
தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"


*

"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"


*

"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"


*

கூந்தலின்
இருந்து பிரிந்த
ஒற்றை முடியென

சந்திப்பின் குறுகிய
வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்...

*

என்றாவது ஒருநாள்
நீ என்னைத் தேடி வந்தால்
எனக்காய் சாட்சி சொல்ல
தூக்கம் தொலைத்த இரவுகளும்
கண்ணீர் நனைத்த தலையணையும்
மிச்சமிருக்கும்....

ஆனால்...
அந்த நாளின் மகிழ்ச்சி தாங்க
நான் உயிரோடிருப்பேனா?


கவிதைகள்




என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?'
என்றா கேட்கிறாய்.

நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!
--

'போதும் பார்த்தது
கண் பட்டுவிடப்போகிறது' என்றாய்
ச்சே...ச்சே..உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.

மௌன பூகம்பம்




அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்


பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"


-வைரமுத்து

அப்பா அம்மா காதல்



உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!

அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.

ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா என்றேன்.

அய்யோ பாவம்! என்றார் அப்பா.

ஏம்ப்பா..?

டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... ‘சரிதான் போடீ!’னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல ‘காதலிக்கலாமா... வேண்டாமா?’னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க! என்றார் சிரித்தபடியே.

சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?’ என்று சண்டைபோட ஆரம்பித்தார்.

அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!


வியாழன், 14 ஆகஸ்ட், 2008

என் குட்டி உலகம் நீ



‘என் அழகை நான் ஆராதிப்பதைவிட, நீ அதிகம் ஆராதிக்கிறாயே... ஏன்? என்றாய்.

உன் அழகால் உனக்கென்ன பயன்? அதன் பயனை எல்லாம் அனுபவிப்பவன் நான்தானே! என்றேன்.

என் அழகால் உனக்கு என்ன பயன்?’

அடுத்த ஜென்மத்தில் நீ ஆணாகப் பிறந்து, ஓர் அழகியைக் காதலி. அப்போது புரியும்!

இந்த ஜென்மத்தில், புரியும்படி கொஞ்சம் சொல்லேன்.

சந்தனத்தால் என்ன பயன் என்பதை சந்தன மரத்துக்கு எப்படிப் புரிய வைப்பது? ஆனால், உன் அழகு செய்யும் மாயங்களைச் சொல்ல முடியும்?

சொல்லு... சொல்லு!

உன் இமைகள் இமைக்கும் போது என்ன நிகழ்கிறது?

என் கண்கள் ஈரமாகிறது. வேறென்ன?

அது உனக்கு! ஆனால், நீ இமைக்கும் ஒவ்வொரு முறையும், நீயும் நானும் மட்டும் வசிக்கும் குட்டி உலகத்தில் இரவு பகல் மாறிக் கொண்டே இருக்கும். இமைகளை நீ மூடினால் இரவு. திறந்தால் பகல். நீ சிரிக்கும் போதோ அந்தக் குட்டி உலகத்தில் அழகான ஒரு குட்டி நிலவே உதிக்கும்...’

அப்படியெனில், என் அழகுக்காகத்தான் நீ என்னைக் காதலிக்கிறாயா. என் அழகெல்லாம் தீர்ந்தபிறகு உன் காதலும் தீர்ந்துவிடுமா?

நீ அப்படி வருகிறாயா? சரி, உன் அழகெல்லாம் எப்போது தீரும்?

எனக்கு வயதாகிற போது! அடி முட்டாள் பெண்ணே, வயதானால் உன் அழகெல்லாம் தீர்ந்துவிடும் என்றா நினைக்கிறாய்? அழகு என்ன உன் வயதிலா இருக்கிறது?

பின்னே?

‘நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீ அழகாக இருந்ததால்தான் நான் உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன் என்பது உண்மைதான். ஆனால், உன்னைப் பார்க்க ஆரம்பித்த பிறகு, நீ பேரழகியாக மாறிவிட்டாய் என்பதுதான் பெரும் உண்மை. ஆகையால் கவலைப்படாதே! நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் வரை உன் அழகு தீராது. இன்னும் சொல்வதென்றால், நீயும் நானும் இறக்கும்வரை உன் அழகு தீரவே தீராது. ஏன் என்றால், அதுவரை நான் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்... காதலோடு.

இதைக் கேட்டு, நீ என் தோளில் சாய்ந்தாய். நம் குட்டி உலகத்தில் ஒரு குட்டிக் குளிர்காலம் ஆரம்பமானது!


குலதெய்வம்



நம் காதலை உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டுவிட்ட ரம்மியமான காலமது! உங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போக என்னையும் அழைத்திருந்தார் உன் தந்தை.

உன்னை மாதிரியே உன் குலதெய்வம்கூட அழகாகத்தான் இருக்கிறது! என்று உன் காதில் சொன்னபடி, குலதெய்வத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் கோயிலைச் சுற்றுகையில், உன் தந்தை என்னைப் பார்த்து, உங்கள் குலதெய்வம் எது? என்று கேட்டார்.

நான் உன்னைக் காட்டி, இதோ! என்றேன்.

உன் குடும்பத்தின் கேலிச் சிரிப்பொலிக்கு நடுவே நீ ஐயோ என்று முகத்தை மூடிக்கொண்டு, கோயில் வாசலிலேயே உட்கார்ந்து விட்டாய்.

நான்உன் அருகில்வந்து, நேரமாகிவிட்டது... வா, போகலாம்! என்றேன்.

நான் வரலை! என்று சிணுங்கினாய்.

ஐயையோ... நீ இங்கேயே இருந்துவிட்டால், இங்கிருக்கும் தெய்வம் எங்கே போவது? வேண்டுமென்றால் சொல்... இதைவிட அழகிய கோயிலாக, நான் கட்டித் தருகிறேன்! என்றேன்.

ஐயோ அப்பா... என்னைக் காப்பாத்துங்கப்பா! என்று கத்தியபடியே எழுந்து ஓடிப்போய், உன் தந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாய்.

உன் தந்தை போதும் என்று கண்டிப்புடன் சொன்னாலும், தன் பெண் நல்ல பையனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்கிற பெருமை அவர் முகத்தில் தாண்டவமாடியது.

நான் பெருமகிழ்ச்சி கொண்டு, கோயிலுக்குள் இருக்கும் தெய்வத்தைத் திரும்பிப் பார்த்தேன்.

தெய்வமோ, என் சந்நிதானத்தில் என்ன விளையாட்டு இது? என்பதுபோல் பொய்க்கோபம் கொண்டு என்னை முறைத்துப் பார்த்தது


கடவுளுக்கு கர்வம் அதிகம்



எப்போதும்போல நேற்றிரவு உன் கனவுக்காகத் தூங்கியபடி காத்திருந்தேன். ஆனால், நீ வருவதற்கு முன், எப்படியோ என் கனவுக்குள் நுழைந்துவிட்ட கடவுள், என்னைப் பார்த்து, குழந்தாய்... உனக்கு என்ன வேண்டும்? என்று அவருக்கே உரிய தோரணையுடன் கேட்டார்.

எனக்கோ கோபம் தலைக்கேறி, யார் நீ? உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது? உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக் கேட்காமலே எனக்கு வாரி வழங்குகிற தேவதை ஒருத்தி இருக்கிறாள். வெளியே போ! அவள் வருகிற நேரமிது என வெடுக்கென்று சொல்லிவிட்டேன்.

உடனே கடவுளுக்குக் கோபம் வந்து, என்னை எரிக்கப் பார்த்தார். உன் அரவணைப்பில் இருக்கும் என்னை எரித்துவிட முடியுமா அவரால்? தன் வரலாற்றில் ஏற்பட்ட முதல் தோல்வியை மறைக்க முடியாமல், முகம் எல்லாம் வேர்த்துக்கொட்ட, மறைந்துவிட்டார் கடவுள்.

ஆனாலும் இந்தக் கடவுளுக்கு கர்வம் அதிகம். எல்லோருக்கும் எல்லாமும் நாம்தாம் என்கிற நினைப்போடு சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் பிறருக்கு வேண்டுமானால் எல்லாமுமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனக்கு எல்லாம் நீதான்!

இந்தக் கடவுள் உன்னிடம் வந்தால் அவரைக் கொஞ்சம் கண்டித்து வை,

‘என்னவருக்கு என்ன வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.இனி அவரைத் தொந்தரவு செய்யாதே!' என்று.

ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது....




நீ அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், ஐயோ... யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது... என்று கத்துவேன் நான் கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிருந்து!

ஆற்றில் இறங்காமல், அடித்துப் பிடித்து நீ என்னிடம் ஓடிவந்து, கத்தாதே... என் தோழிகளெல்லாம் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று சிணுங்குவாய்.

ஆனால், உன் தோழிகளின் கேலியை நீ விரும்புகிறாய் என்பதை உன் சிணுங்கலில் இருக்கும் நடிப்பு காட்டிக் கொடுத்துவிடும்!

உடனே நான், கத்தாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கொரு முத்தம் கொடு! என்பேன். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்... என்பாய் நீ.

என்னது... கல்யாணத்துக்கு அப்புறமா! அப்ப, நமக்கு இன்னும் கல்யாணமாகலையா? என்பேன்.

இல்லை! என்று அழுத்திச் சொல்வாய் நீ.

அப்படின்னா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி முருகன் கோயில்ல வெச்சு, நான் ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினேனே... அது, நீ இல்லையா? என்பேன்.

ஐயையோ... தாலி கட்டினியா! யாருக்கு? என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வாய். ஆனால், அதிலும் நடிப்புதான் இருக்கும்!

ஏனெனில், கொஞ்ச நேரம் கழித்து நான் தாலி கட்டினது வேற யாருக்கும் இல்லடி... உனக்குத்தான்! என் கனவில்... என்று நான் சொல்வேன் என்பது உனக்குத் தெரியும். நம் காதல், நம் வீட்டுக்குத் தெரிந்து, அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகு, முகம் நிறையக் கவலையோடு என்னிடம் வந்தாய் நீ.

என்ன? என்று கேட்டதற்கு, நீங்க ரொம்பப் பணக்காரங்க... நாங்க ரொம்ப ஏழை! நம்ம கல்யாணத்துக்கு உங்க அம்மா, அப்பா நிறைய சீர் கேட்பாங்களோனு எங்க அம்மா, அப்பா பயப்படுறாங்க... என்றாய், முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.

நான் மௌனமாக இருந்தேன்.

கேட்பாங்களா? என்றாய் நீ.

எங்க அம்மா, அப்பா கேட்க மாட்டாங்க... ஆனால், நான் கேட்பேன்... நிறைய! என்றேன்.

நிறையன்னா... எவ்ளோ? என்றாய் விசனத்தோடு. நிறையன்னா... ரொம்ப நிறைய! உன் கனவுகள் எல்லாவற்றையும் கல்யாணச் சீராக எடுத்து வரும்படி கேட்பேன்... அவற்றை நனவாக்கித் தருவதற்காக! என்றேன்.

நீ அழுதாய். ஆனால், அதில் நடிப்பு இல்லை!

மாந்தோப்பில்தான்.......





நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா& அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியை மடித்து முதல் வேட்டியும் கட்டிக்கொண்டு சந்தித்தோம் | பொங்கி வழிந்த கூச்சத்துடன் ஒரு திருவிழா நாளில்.

குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய்... இனிமே உன்னை டா போட்டுக் கூப்பிடமாட்டேன்!

ஏன்?

மாட்டேன்னா... மாட்டேன்!

அப்போ இனிமே நானும் உன்னை டீ போட்டுக் கூப்பிடக்கூடாதா?

இல்லேல்ல... நீ கூப்பிடலாம். கட்டிக்கப் போறவளை வேற எப்படிக் கூப்பிடறதாம்? & சொல்லிவிட்டு, சட்டென்று உதட்டைக் கடித்துக்கொண்டாய். உன் வெட்கத்தில், மாந்தோப்பில் காய்த்திருந்த மாங்காய்களெல்லாம் சிவந்து போயின.

இன்னொரு அமாவாசை நாளில் என் அக்கா, தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை. மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, அதோ பார் நிலா! என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாத பொழுதில் ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில்தான்!

பிறிதொரு வருடத்தில் அதே மாந்தோப்பில்தான், என்னை மறந்துவிடுங்கள் என்று அழுதாய். அதோடு முடிந்துபோனது எல்லாம்!

இப்போது உன்னை இந்தா என்று அழைக்க, ஒரு கணவன் இருக்கிறான்.

அம்மா என்று அழைக்க, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆனால்...

ஏண்டா கல்யாணமே வேணாங்கறே? என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மகனாக நான் இல்லை!

கவிதைகள்





வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

**
கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..

**

எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

**

நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!

**

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்

**

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

**

உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

**

மரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு

**

எனக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!

**

உன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

**

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

**

சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து

கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!

**
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

**

ஒரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!

**

அழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..

**

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும்
போதுதான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்.

**

உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!

**

நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.

**

என்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.

**

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.


திமிரழகி!



மாலையில் நண்பனுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன்.
என்னுடன் படிக்கும் நீயும் இன்னொருத்தியும் அங்கே அதிசயமாக வர, உன்னுடன் வந்தவளைப் பெயர் சொல்லி அழைத்தேன். உண்மையில் உன் பெயர் சொல்லி அழைக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீயோ, பிரபஞ்ச அழகி என்பது போன்ற திமிருடன் திரிபவள். கல்லூரியில் சில நேரம் பேசுவாய்... சில நேரம் யார் நீ? என்பது போல் பார்த்துப் போவாய்.

இருவரும் அருகில் வந்தீர்கள். என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக, உன்னுடன் வந்தவளை என் தோழி என்றும், உன்னை என் க்ளாஸ்மேட் என்றும் சொன்னேன். க்ளாஸ்மேட் என்று சொல்லும்போது உன் முகத்தில் ஒரு கனல் எழுந்து அடங்கியதையும் கவனித்தேன். உடனே கிளம்பறோம் என்று உலாவைத் தொடர்ந்தீர்கள்.

அடுத்த நாள் கல்லூரியில் உனக்கு உற்சாகமாக ஒரு ஹலோ சொன்னேன்.
ஆனால், நீயோ கவனிக்காமல் காற்றாக போனாய்.
"அவ உன் மேல் கோபமா இருக்கா! "என்றாள் எனக்கும் உனக்குமான தோழி.
"ஏன்?" என்றேன் வியப்பு காட்டாமல்.
"நேத்தைய கோபம்! "என்றாள்.

அதானே உண்மை! தோழியைத்தான் தோழினு சொல்ல முடியும். மனசுக்குள்ள ஆசை ஆசையா விரும்பற பெண்ணை, தோழினு சொல்லி நட்பைக் கேவலப்படுத்த எனக்குத் தெரியாது என்றேன்.

அதிர்ந்துபோனாய் நீ! உன் முகத்தில் கோபம் சலங்கை கட்டி சதிராட ஆரம்பித்தது. ஆனால், அதைத் துளியும் வெளிக் காட்டாமல், வேகமாக என் பக்கம் திரும்பினாய்... நீங்க நெனைச்சாப் போதுமா... நாங்க நெனைக்க வேண்டாமா? வெடுக்கெனச் சொல்லி விட்டு வேக வேகமாய், புயல் மாதிரி போய் விட்டாய்.

நானோ ஏமாற்றத்துடன் அப்போதே கல்லூரியி லிருந்து வெளியேறினேன்.
அடுத்த இரண்டு நாட்களுக்குக் கல்லூரிப் பக்கமே எட்டிப் பார்க்க வில்லை. ஆனாலும் மாலைகளில் கடற்கரைக்குப் போய்,
எப்போதும் நான் அமர்ந்திருக்கும் இடமருகில் மறைந்து நின்று, நீ வருகிறாயா... வந்து என்னைத் தேடுகிறாயா என்று பார்ப்பேன்.
நீயும் வந்தாய். வந்து என்னைத் தேடிவிட்டு, ஏதோ முணுமுணுத்தபடி திரும்பிப் போனாய். "டேய் மகனே... சத்தியமா இது காதல்தான்! " என்று என் காதில் கிசுகிசுத்தன நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்.

மூன்றாம் நாள் மாலையில், இன்னொரு நண்பனுடன் கடற்கரையில், என் இடத்தில் அமர்ந்திருந்தேன். தோழியுடன் வந்த உன் கண்களில் மின்னல். அது மின்னல் என்பதனால் அடுத்த கணமே காணாமல் போனது.

எங்கே காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? என்றாள் உன் தோழி... ஸாரி, என் தோழி. லவ் ஃபெயிலியர்! என்றேன் கூசாமல்.

உன் முகத்தில் ஒரு எகத்தாளப் புன்னகை எழுந்து அடங்கியது அவசரமாக.
"சரி, அதை விடு " என்று நானே பேச்சை மாற்றி, என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு, உங்கள் இருவரையும் என் தோழிகள் என்று சொல்லி, பிளேட்டைத் திருப்பிப் போட்டேன்.

அதுவரை அமைதியாக இருந்த நீ இப்ப மட்டும் நட்பைக் கேவலப்படுத்தலாமா? என்று நமக்குப் புரிகிற பாஷையில் வெடித்தாய்.

"இதில் என்ன கேவலம்? உண்மையைத்தானே சொன் னேன்! "என்றேன்.
"அப்போ... நீ என்னைக் காதலிக்கலியா? "
ஆவேசம் கொண்ட அம்பிகை யான நீ,
"அய்யோ... நீ சரியான மக்குப் பிளாஸ்திரிடா!
அன்னிக்கு நீ என்னை கிளாஸ்மேட்னு சொன்னதுக்கு, நான் கோவிச்சுக்கிட்டப்பவே உனக்குப் புரிஞ்சிருக்க வேண்டாமா? " என்றாய் படபடக்கும் பட்டாம்பூச்சியாய்.
"அப்படி வா வழிக்கு!" என்றேன்.
"மண்ணாங்கட்டி... தனியா கூட்டிட்டுப் போயி, ஒரு ரோஜாப்பூ கொடுத்து, காதலை அழகா சொல்லத் தெரியாதா உனக்கு?" என்றாய் குறுகுறு பார்வையுடன்.

"ஓஹோ... மகாராணிக்கு இதுதான் பிரச்னையா? வாங்க மேடம் என்னோட! "என்று உன் கையைப் பிடித்து இழுத்துப்போய்,

ஒரு பூக்கடை முன் நிறுத்தி...
‘எல்லாப் பூவையும் குடுங்க!’ என்று பூக்காரம்மாவிடம் கேட்டு வாங்கி, அப்படியே பூக்கூடையை உன் முன் நீட்டி, ‘நான் உன்னைக் காதலிக் கிறேன்!’ என்றேன்.
வெள்ளமென வெட்கம் பாயச் சொன்னாய்...

"இந்த ராட்சஸிக்கு ஏத்த ராட்சஸன்டா நீ! "


**

உன்னை விட
தீயணைப்புத் துறை எவ்வளவோ மேல். வீடு எரிந்தால் அது அணைக்க வரும். ஆனால், நீயோ என்னை வந்து அணைத்துவிட்டு எரியவிடுகிறாய்!
**

நிலவைச் சுற்றி வர
விஞ்ஞானிகள் செயற்கைக் கோள் அனுப்புவது மாதிரி உன்னைச் சுற்றி வர என்னை அனுப்பியிருக்கிறது காதல்!


நீ!






நான் விருப்பப்பட்டது
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!

**


உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,

குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!

**


உன் நினைவுகளே

வாழ்க்கை
என்றான பிறகு

நீ

தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?

**


குட்டி போடும்

என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..

**


செடி கொடி மரத்தில்

மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!

**


என்ன எழுதினாலும்,

உன்னுடைய
“அவ்வவ்வா”
“ஊஹூம்…”
“டேய் ”
“ப்ச்..ப்ச்..”
“லூஸு”
மணா"    
"உன் முத்தம்"
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள்
தோற்று விடுகின்றன!

**


என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...

**


அத்தி பூத்தது...

உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் -
தினமும் பூத்தது!

**


உன்னிடம் பேச

எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .

**


என்னை கொல்ல

வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

**


மன்னித்து விடு!

நான் உன்னை
ஒருநாள் ஒருகணம்
மறக்க
மறந்துவிட்டேன்….

**


செடியில் பூத்துக்கொண்டே

உன் முகத்திலும்
பூக்க
எப்படி முடிகிறது
இந்தப் பூக்களால்??

வலி....






இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!

நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!

*

பிறந்த
குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!

*

கடல்
கடந்து
பார்க்க
வந்திருக்கின்றன
சோறு வைத்த
காக்கைகள்!

*
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!

*

ஆழிப்
பேரலைகளும்
எங்கள்
பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப் போய்
கொல்லத்தான்
செய்தன
ஆனாலும்!

*

இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீர்கள்!

நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம்!

*
வயசுக்கு வந்த மகள்
தூங்குகிறாள்!
இல்லறம்
எங்களைப்
பொறுத்தவரை
இயலாத அறம்

*
அங்கே
சிங்களத்தில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டினார்கள்!
புரிந்தது.

இங்கே
தமிழில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டுகிறார்கள்
புரியவில்லை

*

பஞ்சம்
பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறீர்கள்!
உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்

*

தமிழில்தான்
விசாரித்தார்கள்
தமிழர்களாய்
இல்லை

*

மன்னாருக்கும்
மண்டபத்துக்கும்
இடையே
இருப்பது
வளைகுடா இல்லை!
"தமிழர்சதுக்கம்."

*

அங்கே
கேட்டுக் கேள்வி இல்லாமல்
கொன்றார்கள்!
இங்கே
கேள்வி கேட்டுக்
கொல்கிறார்கள்

*

தவறியவர்கள்
மீன்களுக்கு
இரையேனோம்!
தப்பித்தவர்கள்
'ஏன்?'களுக்கு
இரையானோம்

*

எங்களால்
இறங்கி
வந்து
கரையேற முடிகிறது!
உங்களால்
இரங்கி
வந்து
உரையாடமுடியவில்லை!

*

இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.

*

நேற்று
வரை
சேலைகள்
இன்றுமுதல்
சுவர்கள்!

*

முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது...
‘யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!’

நன்றி : அறிவுமதி


மிகவும் பிடித்த பாடல்கள்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

அன்று குத்தியதும் அதே முள், இன்று குத்தியதும் அதே முள்



புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. "இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை" என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

"என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே" என்று மனைவி கேட்க, "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி" என்றான் கணவன்.

தவளைக்குக் காது கேட்காது




ஒரு ஆராய்ச்சியாளர் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் அதைத் "தாவு" என்று சொன்னால் அது தாவும்படி பழக்கியிருந்தார்.

ஆராய்ச்சியில் அதன் கால்களில் ஒன்றை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் தவளை மூன்று கால்களால் கஷ்டப்பட்டுக் குதித்தது.

அடுத்து இன்னொரு காலை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் அப்போதும் கஷ்டப்பட்டு குதித்தது.

மூன்றாவது காலை எடுத்ததும் மிகுந்த வலியுடன் ஒற்றைக்காலால் குதித்து எப்படியோ தாவியது.

கடைசியாக நாலாவது காலையும் அவர் வெட்டிவிட்டு, தாவு என்றார்.

நகரவே முடியாமல் தவளை பரிதாபமாக விழித்தது. தவளை அசையவே இல்லை. அவர் தன் ஆராய்ச்சி முடிவில் எழுதினார்,

"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்குக் காது கேட்காது"

இப்படித்தான் பிரச்சினைகளின் உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான முடிவுகளுக்கு வந்துவிடுகிறார்கள்.

புத்தகத்திற்குள்



அமெரிக்க நாவலாசிரியை அன்னா பாரிஷ், ஒரு சமயம் தனது கணவருடன் ஒரு பழைய புத்தகக்கடையில் இருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 'ஜேக் ஃப்ராஸ்ட் மற்றும் சில கதைகள்' என்ற புத்தகம் கைக்குக் கிடைத்தது. அதை எடுத்துத் தனது கணவரிடம் காண்பித்து, தான் சின்னவயதில் ஆசையோடு அந்தக் கதைப் புத்தகத்தைப் படித்ததாக சொன்னார்.

அவரது கணவர் அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கி முதல் பக்கத்தைத் திருப்பினார். அதிசயம்! அதில் முதல் பக்கத்தில் அன்னா பாரிஷின் பெயர், பழைய விலாசம் எல்லாம் இருந்தது. அந்தப் புத்தகம் அவர் படித்த அதே புத்தகம்தான்!

இரட்டை விபத்துக்கள்




ஒன்றாகப் பிறந்த இரட்டைச் சகோதரர்கள் 2002ம் ஆண்டு சிலமணி நேர இடைவெளியில் ஒருவருக்குப் பின் ஒருவராக இறந்து போனார்கள். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? அவர்கள் இருவருமே ஃபின்லாந்தின் வடக்குப்பகுதியில் ஒரே சாலையில் வெவ்வேறு விபத்துகளில் இறந்துபோனதுதான் ஆச்சரியமான செய்தி.

இரட்டையரில் முதல் சகோதரன் ஃபின்லாந்தின் தலைநகரிலிருந்து அறுநூறுமைல் தூரத்தில் இருந்த ராஹே என்னுமிடத்தில் தனது பைக்கில் வந்தபோது எதிரே வந்த லாரி மோதி இறந்தான். அதற்கு 1.5 கிலோமீட்டர் தூரத்தில்தான் அவனது சகோதரனும் விபத்தில் இறந்திருக்கிறான்.

'இதுமாதிரி சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை. இந்த சாலையில் வாகனங்கள் அதிகம் போனாலும் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதில்லை' என்று சொல்கிறார் அங்கிருந்த போலீஸ் அதிகாரி. இறந்தவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்று அறியும்போது இந்த சம்பவம் மயிர் கூச்செறிய வைக்கிறது. எல்லாம் மேலே இருக்கும் அவன் செயல்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது எனச் சொல்கிறார் அவர்.

ஒரே ஒரு கேள்வி




மிகவும் சமத்தான பையன் ஒருவன் நேர்காணலுக்குச் சென்றபோது, அவனை நேர்முகம் செய்தவர் சற்றே கர்வத்துடன் கேட்டார்.

"உனக்கு சுலபமான 10 கேள்விகள் கேட்கலாமா அல்லது கடினமான ஒரே கேள்வி கேட்கலாமா?"

மாணவன் சற்றே கர்வத்துடன் சொன்னான், "கஷ்டமான ஒரே கேள்வி கேளுங்கள்"

"வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?"

"3000 மில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன" என்றான் இமை கொட்டாமல்.

அவர் கேட்டார், "அதெப்படி சொல்கிறாய்? உன்னால் நிரூபிக்க முடியுமா?"

அவன் அமைதியாகச் சொன்னான் "நீங்கள் ஒரே ஒரு கேள்விதானே கேட்க ஒப்புக்கொண்டிர்கள்?"

நேர்முகம் செய்தவர் ????????

கொல்லாமல் விடமாட்டேன்



இது 1883ம் ஆண்டு நடந்தது. ஹென்றி ஜீக்லண்ட் என்பவன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கடைசியில் கை விட்டு விட்டான். மனமுடைந்த அவள் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் கோபமடைந்த அவளது சகோதரன் தன் சகோதரியின் காதலனைக் கொன்றுவிடுவது என்று தீர்மானித்தான். அவனைத் தேடிப் பிடித்துத் துப்பாக்கியால் சுட்டான்.

அவன் இறந்துவிட்டான் என்று சகோதரன் நினைத்துத் தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அந்தக் காதலன் இறக்கவில்லை. சகோதரன் சுட்ட குண்டு காதலனின் முகத்தை லேசாக உரசிச் சென்று அருகிலிருந்த மரத்திற்குள் பாய்ந்துவிட்டது.

பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் காதலன் ஜிக்லண்ட் குண்டு பாய்ந்திருந்த அந்த மரத்தை வெடிமருந்து வைத்துத் தகர்க்க தீர்மானித்தான். அந்த வெடிமருந்து வெடித்தபோது மரத்தில் தங்கியிருந்த குண்டு சிதறி ஜீக்லன்டின்
தலைக்குள் பாய்ந்தது. அந்த இடத்திலேயே அவன் மரணமடைந்தான்.

சகோதரன் அன்று கொல்ல முடியாததை மரம் நின்று கொன்றுவிட்டது!

ஒற்றுமையோ ஒற்றுமை!




இத்தாலியிலுள்ள மொன்சா என்னுமிடத்தில் அரசன் முதலாம் உம்பர்டொ, அவரது துணையுடன் ஒரு சிறிய ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு சாப்பிடும்போது அந்த ஹோட்டல் சொந்தக்காரரும், தானும் உருவ ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்தார். இதைப்பற்றி அதிசயத்துடன் அவர்கள் பேசிக்கொண்டபோது அவர்களுக்குள் இன்னும் பல ஒற்றுமைகளை அறிய முடிந்தது.

1. இரண்டு பேருடைய பிறந்த தினமும் ஒன்று. (மார்ச் 14, 1844)

2. ஒரே ஊரில் பிறந்திருந்தார்கள்.

3. இரண்டு பேருடைய மனைவியரின் பெயரும் மார்கரீடா.

4. அரசன் உம்பர்டூ அரசனாகப் பதவியேற்ற அதே நாளில்தான் அந்த ஹோட்டல்காரரும் தனது ஹோட்டலைத் துவங்கினார்.

5. 29 ஜூலை 1900 அன்று ஹோட்டல் சொந்தக்காரர் மர்மமான முறையில் துப்பாக்கி சூட்டில் உயிர் துறந்தார் என்ற செய்தி அரசருக்கு வந்தது. அவர் அந்த இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும்போதே கூட்டத்திலிருந்த ஒரு கொடியவன் அரசனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான்.

கதையல்ல, நிஜம்!




எட்கர் ஆலன் போ என்ற பிரபலமான நாவல் ஆசிரியர் ஒருமுறை 'ஆர்தர் கார்டன் பின்னின் கதை" என்ற புத்தகத்தை எழுதினார். அதன் கதை ஒரு கப்பல் விபத்தில் சிக்கித் தப்பிய நால்வரைப் பற்றியது. அந்தக் கதையின்படி காப்பாற்ற யாருமில்லாமல் வெகு நாட்களாக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நான்கு பேரில் மூவர் உணவுக்குக் கூட வழியில்லாமல் அந்தக் கப்பலின் ஊழியனான ஒரு சிறு பையனையே கொன்று உணவாக்கிக் கொண்டனர்.


1884ம் ஆண்டு உண்மையிலேயே Mignonette என்ற ஒரு கப்பல் கவிழ்ந்தது. அதிலும் நான்கு பேர்தான் உயிர் பிழைத்தனர். கதையில் வந்தது போலவே அந்த நால்வரில் மூவர் கப்பல் கடைநிலை ஊழியனைக் கொன்று பசியாறினார்கள். இதில் இன்னொரு அதிசயம், இறந்துபோன அந்த ஊழியனின் பெயர் கதையில் இருந்தது போலவே நிஜத்திலும் ரிச்சர்ட் பார்க்கர் என்பதுதான்!

குடிச்சாப் போகுமா துக்கம்?



குடிப்பழக்கம் உள்ளவர்களிடமெல்லாம் காரணம் கேட்டால் கவலையை மறக்கக் குடிப்பதாகக் கூறுவார்கள். ஆனால் உண்மையில் குடிப்பதால் கவலை அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறது ஓர் ஆய்வு.

இரு பிரிவு எலிகளை இதற்காகத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு லேசான அளவில் மின் அதிர்வு தரப்பட்டது. அதன் பிறகு ஒரு பிரிவு எலிகளுக்கு 'எத்தனால்' (சாராயம்) கொடுத்துக் கண்காணித்தார்கள். இன்னொரு பிரிவிற்கு 'எத்தனால்' செலுத்தவில்லை. 'எத்தனால்' செலுத்தப்பட்ட எலிகளுக்கு மதுவில் இருக்கும் போதைத்தன்மை நரம்பிலேயே தங்கிவிடுகிறது.

பய உணர்வு இருந்தால் அது நீங்க இரு வாரங்கள் ஆகின்றன. அதிர்ச்சி நீங்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் 'எத்தனால்' செலுத்தப்படாத எலிகள் அதிர்ச்சியிலிருந்து விரைவில் மீண்டுவிடுகின்றன.

மனிதர்களிடம் சோதனை செய்தபோது கவலையைப் போக்குவதற்காக மது அருந்துவோர் அந்தக் கவலையில்தான் அதிகம் மூழ்குகின்றனர். தாங்கள் விரும்பாத சம்பவத்தை மறப்பதற்காகக் குடிப்பதாகச் சொல்லப்படும் மது அந்த விஷயத்தை நீண்ட காலம் நினைவில் நிறுத்துகிறது என அறிய வந்தது.

குரங்குகளின் குரல்




பேச்சு என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதா? குரங்குகளால் பேச முடியாதா? ஜெர்மன் குழுவினர்கள் இப்படி ஒரு ஆராய்ச்சி நடத்தினர்.

ஆசிய குட்டைவால் குரங்குகளைக் கொண்டு பல்வேறு ஒலிகளை எழுப்பி அவற்றை குரங்குகள் உணர்கின்றனவா என்று சோதிக்கப்பட்டது. அப்போது மனிதர்களைப்போலவே குரங்குகளுக்கும் மூளையில் ஒலிகளை உணரும் பகுதி இருப்பது கண்டறியப்பட்டது.

ஒலியின் தன்மைக்கேற்ப மூளையில் ஏற்படும் மாற்றங்களை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் உறுதி செய்தார்கள். இதனால் குரங்குகள் தங்கள் இனத்துடன் பல்வேறு ஒலி சமிக்ஞை மூலம் பேசிக்கொள்கின்றன. ஒவ்வொரு குரங்கின் குரலுக்கும் வித்தியாசம் கண்டு கொள்கின்றனவாம். ஆனால் இவைகளால் பிற விலங்குகள், பூச்சிகள், இடி மழையின் ஒலிகளைத் துல்லியமாக அறிய முடிவதில்லை.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களுக்குக் குரல் இழப்பு, செவித்திறன் இழப்புக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

ஆவி பேய் பூதம்




இரவில் தனியாக சாலையில் நடந்து செல்வதென்றாலே ஒருவித பயம். படித்த பல பேய்க்கதைகள் நினைவிற்கு வந்து சங்கடம் செய்யும். ஏன் இரவில்தான் பேய் வர வேண்டும்? பகல் என்றால் பேய்களுக்கு பயமா? இப்படி ஒரு ஆராய்ச்சி.

உண்மையில் அப்படியில்லையாம். மனிதர்களுக்குத்தான் இருளைக் கண்டால் மனபிராந்தி ஏற்படுகிறதாம். இதை அறிவியல் பூர்வமாக லண்டனில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு நிரூபித்துள்ளது.


இருள் சூழ்ந்திருக்கும்போது நிழலைப் பார்த்து இல்லாத ஒரு உருவத்தை மூளை உருவாக்கிக்கொள்கிறது. கண்களால் காணும் காட்சி முழுமையாக மூளைக்குச் செல்வதற்குள் ஏற்படும் மாயத்தோற்றம் இது. இருளில் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு பந்துகளை வீசச் செய்தபோது வீசப்படாத மூன்றாவது பந்து ஒன்றும் வந்து மறையும். இது கண்களையும் மூளையையும் ஏமாற்றும் செயல்.

உண்மையில் பந்து வீசப்படாதபோது அப்படி ஒரு பந்து வீசப்பட்டதாகவும் வீசப்பட்ட பந்து மற்ற இரு பந்துகளைப்போல மறைந்து விடுவதாகவும் மனது உருவகப்படுத்திக் கொள்கிறது. கம்ப்யூட்டர் மூலமாகவும் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டர் திரையின் மத்தியில் 80 மில்லி விநாடிகள் மட்டுமே தோன்றும் சிறிய பழுப்பு நிறத்திலான முக்கோணம் இன்னொரு அறையில் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சோதனையின்போது உண்மையில் திரையில் தோன்றிய முக்கோணத்தைவிட அதிக எண்ணிக்கையில் முக்கோணங்களை அடுத்த அறையில் இருந்த விஞ்ஞானிகளின் மூளை பதிவு செய்தது தெரியவந்தது.

இதன்மூலம் ஒளியில்லாத இடங்களில் காணப்படும் காட்சிகள் மூளையை ஏமாற்றும் வகையில் தோன்றுகின்றன. இதைத்தான் பேய் என்றும் ஆவி என்றும் மூளை கற்பனை செய்துகொள்கிறது எனச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அளந்து சிரியுங்க..



வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் வாய் விட்டு மனதாரச் சிரிக்கிறோம்? வெறுமனே ஒரு மென்னகையோடு, எங்கே இதற்குமேல் சிரித்தால் காசு போய்விடுமோ என்பது போலச் சிரிக்கிறோம்.

ஜப்பான் நாட்டு மனோதத்துவப் பேராசிரியர் யோஜி கிமுரோ சிரிப்பை அளப்பதற்கு ஒரு டிஜிடல் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் சொல்கிறார், "வாயாற வயிறு குலுங்கச் சிரித்தால்தான் அது இயல்பான சிரிப்பு.

சிரிக்கும்போது பல முறை 'ஹாஹ் ஹாஹ்' என்ற சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் மின்னதிர்வுகள் உடலில் பரவி சுரப்பிகள் இயங்கும் திறன் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராகும். இதயத்துக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தசைகள் (உதரவிதானம்) முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும்".

குறிப்பிட்ட அளவு 'ஹாஹ் ஹாஹ்'கள் நம்மிடமிருந்து வெளிவரும்போது ஏற்படும் மின்னதிர்வுகளை இவர் கண்டுபிடுத்துள்ள டிஜிடல் கருவி அளவிடுகிறது. நகைச்சுவை உணர்வே இந்த மின்னதிர்வுகளை ஏற்படுத்தி மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும்.

அப்புறம் என்ன? 'ஹாஹ் ஹாஹ்' என்று சிரிக்க வேண்டியதுதானே! (தனியாக மட்டும் சிரிக்காதீர்கள்! வேறுமாதிரியாக நினைத்துக்கொள்ளப் போகிறார்கள்!)

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

தமிழ்மொழி





தடுக்கி விழுந்தால்
மட்டும் அ…ஆ…

சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..

சூடு பட்டால்
மட்டும் உ…ஊ..

அதட்டும்போது
மட்டும் எ..ஏ…

ஐயத்தின்போது
மட்டும் ஐ….

ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ…ஓ…

வக்கணையின் போது
மட்டும் ஒள

விக்கலின்போது
மட்டும் …..

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
செம்மொழியென்று


-நானில்லை


பெண்களின் முன்னேற்றம்



ஆண்களுக்கு பஞ்சமா என்ன ........??
நான் வேறு எதுவும் சொல்வதாயில்லை , நீங்களே புரிந்து கொள்ளுங்கள் .

நட்பு



துடிக்க மறுக்கும்
இருதயம் கூட
நட்பு என்றவுடன்
விழித்துக் கொள்கிறதே?

நட்புக்கு பொருள்
தேடி நீயென்று
கண்டுக் கொண்டேன்

உன்னைக் காணும்
போது நாய்க்குட்டியாய்
துள்ளும் இந்த
மனது உன்னைப்
பிரிகையில்
தற்கொலைச் செய்துக்
கொள்ளுதடி

உன்னுடைய தவிர்ப்பில்
தொடங்கியது
என் முதல்
தவிப்பு

நீ
என்னை
நண்பனாக
ஏற்றுக்கொள்ளும் வரை
தொடர்கிறதடி.........






உன் நினைவுகளை நேசிக்கிறேன்




அடிக்கடி எட்டிப்
பார்க்கும்
மழையை போல
தலையை காட்டுகிறது
உனது ஞாபகங்கள்

*

உரம் போட்டு
வளர்ப்பது
போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்

*

அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?

*

யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிறது

*

உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என
நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...

கவிதையோடு வரும் கவலை என்ன இலவச இணைப்பா?




உன் பார்வையில்
எத்தனை மௌன மொழிகள்!

விழியோரம் வழிந்திடும்
இரகசியப் பார்வை!

இதழோடு இதழ்
உரசிடும் மெல்லிய புன்னகை!

உள்மனம் உன்னை
நெருங்கச் சொல்கிறது!

நீயோ- பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் ஓடுகிறாய்

எப்போதோ பார்த்த உன்னை
தப்பாமல் நினைக்கிறேன்

சிக்காமல் செல்லும் உன்னை
சிறையெடுக்கத் தவிக்கிறேன்

சிவனில் பாதி சக்தியாமே!
எனக்குச் சக்தி கொடுப்பாயா?

பெண்ணே!
காதலித்தால் கவிதை வருமாமே!

கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?

காதலெனும் (க)விதையை
விதைத்துவிட்டேன்

நல்ல மரம் வளர
நீர் ஊற்று

நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு.

உன் பிரிவு ....





தற்காலிகமான பிரிவுகளிலும் கூட
பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தையாய்
அடம் பிடித்திருக்கிறது என் மனசு....

நிரந்தரமானதோர் பிரிவிலோ
முதியோர் இல்லத்தில் தந்தையை
விட்டுச்செல்லும் மகனைப்போல
இரக்கமற்றதாக இருக்கிறது உன் மனசு...

கல்லென்று தெரிந்தும் கடவுளை
நம்பும் பக்தனை போல
பித்தனாயிருக்கிறது என் மனசு...

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

முல்லாவின் திருமணம்



முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்

”ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன் “

அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் “ இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? “

”பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது ” என்றார் முல்லா

பெண்ணின் தந்தை : ???????????

நான் யாரிடம் கேட்பது?




ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.

அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்

அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “

அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றான்


வைரமுத்து கவிதைகள்




1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து
மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி


2. காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.


3. சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!


4. சிற்றிலக்கியக் காலம்
தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்


5. தேசிய காலம்
சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?


6 .திராவிட காலம் - 1
இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?


7. திராவிட காலம் -2
விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது? விடையாட வேண்டும் வாடி என் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே


8. புதுக்கவிதைக் காலம் -1
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை


9. புதுக்கவிதைக் காலம் - 2
உன்வீட்டு
ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு
நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய்
அழுக்குச் செய்த உள்ளாடைகள்


-வைரமுத்து