ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வியாழன், 9 அக்டோபர், 2008

என் முடிவு


நாளை நான் இறந்து விடுவேன்.....
முற்றத்து மல்லிகையும் வேலியோரத்து
செவ்வரத்தையும்....
வழமை போல் பூக்கத்தான் போகின்றன...
ஆனாலும்... நான் அறிய மாட்டேன்....

மரண ஓலம்
வீட்டை நிறைக்கும்....
“பொடி எப்ப எடுப்பினம்” அன்புடையோரின்
அக்கறையான விசாரிப்புகளும் 
அடிக்கடி நடக்கும்.....
இதுவும் நான் அறிய மாட்டேன்.....

மாமரத்தின் உச்சியிலே கூடுகட்டி வாழும்
தூக்கணாம் குருவியும் ஒரு கணம்
எட்டிப் பார்த்துச் செல்லும்...... மறந்து விடும்...
உறவுகள் அழும்......

ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்
முழுசாய் ஓட.... என் முகமும்
மறந்து விடும்.....

கொஞ்சம் கொஞ்சமாய்.....
சுவரில் சித்திரமாய்.....
என் படமும் ஏறிவிடும்.....
இவையும் நான் அறிய மாட்டேன்....

ஒரு வருடம் ஆகிவிட்டால்....
எல்லோரும் எனை மறந்திடுவர்..... என்
பெயர்கூட மறந்திடுவர்

ஆனாலும்
எனக்காக
எங்கோ தொலை தூரத்தில்....
ஆத்மார்த்தமாய்...
இதயத்தின் வலியெல்லாம் ஒன்று சேர

ஒரே ஒரு ஜீவன் மட்டும் எப்பவும்
அழுது கொண்டிருக்கும்....
அது மட்டும் நான் அறிவேன்.....