ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வியாழன், 3 ஜூலை, 2008

ஊரிலை மட்டுமில்லை..

அண்மைக் காலங்களில் அதிகமாக எம்மிடையேயான பெரும் தலைவலியான விடயங்களாக தென்னிந்தியத் தமிழ்ச்சினிமாவும், வருடக்கணக்கில் இழுபட்டு அரைத்தமாவையே திருப்பித் திருப்பி அரைத்து அலுப்பையும் ஆளுமைகளைத் தகர்த்துவிடுகிற போதைவஸ்தாகவும் எம்மை ஆளுகின்ற சின்னத்திரைத் தொடர்கள் என்பனவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தாயகத்திலிருந்து வெளியாகிய பல கட்டுரைகளிலிருந்து எங்கள் கிராமங்கள் வரையும் சினிமா, சின்னத்திரையின் ஆதிக்கம் என்பன எத்தகைய தாக்கத்தை நமது சமூகத்தில் பரவிவிட்டுள்ளது என்பதற்கு ஆதார சாட்சிகள் கிடைக்கின்றன.

அண்மையில் எழுத்தாளர் குந்தவை அவர்கள் எழுதிய கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. யாழ் முதல் தமிழர் தாயகப் பிரதேசங்கள்வரை சின்னத்திரை நாடகங்களும், சினிமாப்படங்களும் எத்தகைய ஆளுமைகளைச் செலுத்துகின்றன என்பதனை மிகுந்த வேதனைகளுடனும் அனுபவப்பதிவுகளுடனும் பலவிடயங்களைச் சாட்சியப்படுத்தி எழுதியிருந்தார் குந்தவை அவர்கள்.

அக்கட்டுரையில் தமிழர் தாயகத்தில் ஆளுமை கொண்டுள்ள ஒளியுணர் சாதனத்தின் சீர்கேடுகளும் கணணியின் பயன்பாடு, அதன் தேவை தெளிவு நன்மைகளையெல்லாம் மறந்து வீசீடியிலும், டிவிடியிலும் திரைப்படம் மட்டுமே பார்க்கவும் பயன்படுத்தப்படும் கணணிகளின் பாவனைகள் பற்றியெல்லாம் கூறியிருந்தார் குந்தவை. அவர் கூறிய அதே நிலையில் புலத்துத் தமிழர்களும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அமிழ்ந்து போயுள்ள அவலத்தை எழுதென்ற உந்துதல் இந்தக் கட்டுரைக்குள் கால் பதிக்கக் காரணமாகிறது.


முன்பு, அதாவது தாயகத்தில் இருந்த காலங்களில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு சினிமாவின் வெற்றியைத் தீர்மானிப்பது பெண்கள் என்று. அப்போது அதன் விளக்கம் புரியாத புதிராகவே இருந்துவிட்டது. கடந்த எட்டு வருடங்களுக்குள் தொடர்ந்த தொலைக்காட்சி, வானொலிகளின் வருகையானது அன்றொருநாள் சொல்லக் கேட்ட சினிமாவின் வெற்றியின் பெண்களின் தீர்மானம் என்பதன் பொருள் இன்று நன்றாகவே புரிந்துள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு புலத்திலும் பெண்களும், இளைஞர்களும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புகுந்து வெளியுலக வாசிப்பையோ, அறிதலையோ பெற்றுக் கொள்ளாது அல்லது விரும்பாது சினிமாவும், சின்னத்திரை நாடகங்களுமே அவர்களது கனவாகவும், காத்திருப்பாகவும் போயிருக்கின்ற அவலமானது நமது எதிர்காலச் சந்ததியின் இருப்பையே நெருப்பிடும் நிலையில் இருப்பது வேதனையன்றி வேறாக முடியாது.

இந்த அவலத்துக்குள்ளிருந்து நம்மத்தியில் பாட்ஷாக்களும், பாபாக்களும், தீனாக்களும், திருப்பாச்சிகளும், சச்சின்களும், கட்சிகள் அமைக்கும் அளவுக்கு நடிக நடிகையரின் பெயர்களில் சண்டைக் குழுக்களும் உருவாகி வெள்ளையர்கள் மத்தியில் தமிழரென்றால் மனநலம் குன்றிய, சிந்திப்புத் திறனை இழந்த வன்முறையாளர்கள் எனுமளவிற்கு தமிழரின் நிலைப்பாடு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

சினிமாவில் வரும் கதாநாயகர்கள் போன்ற நடை, உடை, பாவனைகள் மாற்றம் பெற்று வெட்டும், கொத்துமே பதில்களாகவும் பதியமிடல்களாகவும் ஆகிவருகிறது. இத்தகைய சினிமாவின் தாக்கத்துக்கு உட்படாதவர்கள் என குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சிறுதொகையை மட்டுமே காணமுடியும்.
'சினிமாவில் நல்லதை எடுத்து கெட்டதை விடுங்கோ' என்ற வாதங்களும், 'மக்கள் விரும்புவதை நாங்கள் கொடுக்கிறோம்' என சினிமா வட்டாரத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் எல்லோரும் தங்களது பணப்பைகளின் நிரப்புதலுக்கான சாட்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருப்பதும் காதுகளில் எட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

திரைப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதையம்சம், யதார்த்தம், நடைமுறைகளுக்கு உட்பட்டும் அப்பப்போது ஒருசில படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. எனினும் 100இற்கு 95 படங்கள் பெண்களை உரித்துப்போட்டு குளோசப்பில் பெண்ணை அமுக்கிப் பெண்ணின் அங்கங்களே அங்கு ஆதாரமாக அவர்களது மூலதனமாகவும் விற்கப்படுகிறது. இதில் கதாநாயகர்களின் 100பேரை அடிக்கும் வல்லமையும், சண்டியத்தனம் மிக்க சண்டியர்களுமே திரைப்படங்களை ஆளுமை செய்யும் ஆதாரங்களாக இருக்க, நல்லதை எடுத்து கெட்டதை எந்தக் கருவி கொண்டு தவிர்ப்பது?

இந்தச் சண்டியர்கள் போல தங்களையும் உருவாக்கி தங்கள் எதிர்காலத்தையே இழந்து போய் சிறைகளிலும், அங்கங்களை இழந்தும், மனநோயாளிகளானவர்களையும் கண்ணூடு பார்த்தும் அப்படித் தங்கள் வாழ்வை அழித்தவர்களின் நிலையின் உணர்வுகளின் உள்வாங்கலாகவும் இந்த வியாபாரச் சகதிக்குள்ளிருந்து விடுபடுதலுக்கான வழிகளை நமது ஊடகங்கள் நடைமுறைப்படுத்தலே சாலச் சிறந்ததாகும்.
கடந்த வருடம் நண்பரொருவர் பிரான்ஸ் லாச்சப்பலுக்குச் சென்று 3ம் நாளே திரும்பி வந்து சொன்ன சோகம் இது,

லாச்சப்பல் பகுதியில் கடையொன்றுக்குச் செல்லும் வழியில் நான்கு இளைஞர்கள் நின்றார்கள். அவர்களை இந்த நண்பர் ஊரில் அறிந்திருக்கிறார். அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தியிருக்கிறார். கடையிலிருந்து வெளியில் வந்து சற்றுத் தூரத்தில் அந்த இளைஞர்கள் இவரைக் கூப்பிட்டு 'என்னத்துக்கு எங்களைப் பாத்துச் சிரிச்சனீ?' 'உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் இன்னாற்றை மகனெல்லோ' என அவர் கூறிமுடிக்க முதல் காதைப்பொத்தி அவருக்கு விழுந்த அடிக்கு அவரால் இன்னும் காரணம் காண முடியவில்லை.

பிரான்ஸ் பொலிசாரின் வடிகட்டலில் தற்போது இத்தகைய நடப்புக்கள் 90 விகிதம் குறைந்திருப்பினும் ஆங்காங்கு இத்தகைய அடிகள் விழுந்து கொண்டுதானிருக்கிறது. தற்போதைய பிரான்ஸ் நாட்டின் கடுமையான சட்டமானது இத்தகைய அடாவடித்தனங்கள் புரிவோருக்கு சட்டத்தால் சுருக்கிட்டிருப்பது நிம்மதிதான். லண்டன், டென்மார்க் ஆகிய நாடுகளில் சட்டமும் இத்தகைய வன்முறையாளர்களை வடிகட்டுதலில் சற்று அக்கறையின்மையாக இருப்பது பல்வகையான சிக்கல்களை, சமூகச் சீர்கேடுகளை நமது இளையவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

2002 லண்டன் சென்ற போது இலக்கியத் துறைக்குள்ளிருக்கும் ஒருவர் வேதனையுடன் தெரிவித்த சம்பவம். சவுத்தோல் பகுதியில் நடந்த விடயமது. இந்த அன்பர் தமிழ்க் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தமிழர் கடைகள் நெருங்கிய பகுதியொன்றின் வீதிக்கடவையில் 17 வயது மதிக்கத்தக்க யுவதியொருத்தி நிற்கிறாள். அவளைச்சுற்றி ஒரு இளைஞன் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி சினிமாப்பாடலொன்றைப் பாடி அவளைக் கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருக்க அவனுக்குத் துணையாக ஒருவன் துணை ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தானாம். அந்த யுவதி சிரித்தபடி தெருக்கடவையைக் கடந்தாளாம். இந்தத்திருவிளையாடலைப் பார்த்திருந்த இந்த நபர், 'ஏன் தம்பி உப்பிடி ஆடிக்கொண்டு றோட்டிலை நிக்கிறீர் ? காதல் உதில்லை'யென விளக்கம் சொல்ல வெளிக்கிட, துணையாக ஆடியவன் வாளோடு வந்து, 'என்ன தேவைப்படுது?' என்றானாம்.

தப்பினது புண்ணியம் என அந்த நபர் இதுபற்றிச் சொன்னபோது சிரிப்பை உதடுகளுக்குள் புதைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்க, அவர் சொன்னார் 'தீனாவிலை அஜித் வந்தமாதிரியிருந்தது அவன்ரை வருகை'. இவை சில உதாரணங்களே. இன்னும் பல்லாயிரம் கதைகள் இந்தப்புலத்து நிலத்திலும்.
இளைஞர்கள் நிலை இப்படியிருக்க பெண்களின் நிலை இன்னும் ஒருபடி மேலாகவே இருக்கிறது. சின்னத்திரையே இவர்களது சீவனாகி சீனிவருத்தம், கொழுப்பு, உடற்பருமன் என நோய்களையும் வாங்கி நோயாளிகளாகவும் பலர். பெண்கள் பற்றிய கருத்தியலானது சின்னத்திரை, சினிமா இரண்டுமே ஒரேவகைதான்.

சினிமாவில் இரண்டரை மணித்தியாலத்தில் சொல்லிவிடும் விடயத்தை சின்னத்திரை 2-3 வருடங்கள் வரையும் இழுத்தடித்து பெண்ணின் வாழ்வு , வரைமுறையென்பது சமய, சம்பிரதாய, பிற்போக்குத்தனம் மிக்க அடையாளங்களை மட்டும் பிரதிபலிப்பதாகவும், பொறுமை, பூமிக்குப் பெண் சமானம் என்ற கருத்துக்களையே விதைத்துவிட்டு முடிவுகளைக் கொடுத்து விடுகின்றன. இதுவே தமது வாழ்வாக, வரைமுறையாக இந்த நூற்றாண்டிலும் கணிசமானளவு பெண்கள் இத்தகைய கட்டுப்பெட்டித் தனங்களுக்குள் முடங்கி தங்கள் பலத்தையே சின்னத்திரையென்ற சிறுகாட்சிப் பெட்டிக்குள் அழித்து விடுவது மட்டுமல்ல இவர்களது குழந்தைகளுக்கும் இதேபாடத்தையே ஒப்புவித்து எங்கள் இளைய தலைமுறையின் பெண்பிள்ளைகளையும் இன்னொரு நூற்றாண்டு பின்தள்ளியே வைத்து விடுகிறார்கள்.

தாவணிக்குள் தமிழ்க் கலாசாரத்தை தப்பாமல் போதித்துவிடும் எங்களது தாய்மார்களும், தந்தையர்களும் இங்கு பாடசாலைகள் ஊடாக சுற்றுலாச் சென்றாலோ, மேற்படிப்புக்குத் தூர இடம் சென்றாலோ கெட்டுப்போய் விடுவார்கள் என்ற உணர்வுடன் பெண்பிள்ளைகளின் ஆளுமைகள் மழுங்கடிக்கப்படவும் வழிகோலுகின்றது. இத்தகைய செயற்பாட்டில் பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய பல பெண்பிள்ளைகள் ஊரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆண்களுக்கு மனைவிகளாகி அம்மாவின் வழியில் மகளும் சண்தொலைக்காட்சிக்கும் தீபத்துக்கும் தீனியாகி விடுகிறார்கள்.

காசைவாங்கி திரையில் நடிக, நடிகையர்கள் அழுதுவிட்டுப் போக இவர்களோ காசைக்கொடுத்து அழுவதும் அதுவே தங்கள் வாழ்வாகவும் வரித்து, இந்த உலகின் இவர்களால் செய்யப்பட அறியப்பட வேண்டிய எத்தனையோ நல்லவைகள் அறியப்படாமலும் செய்யப்படாமலும் போய்விடுகிறது.
எமது பெற்றோர்கள் போதித்த தாவணிக்குள்ளான தமிழ்ப்பண்பாடு என்ற போதனையைக் கூட தளர்த்திவிட்டு ஒருபகுதி 'மன்மதராசாவுக்கும், ஈராக்கு யுத்தம், மேமாதம் 98இல் மேஜர் ஆனேனே...." இப்படி நிறையவே பெண்பற்றிய பச்சையான கொச்சைப் பாடல்களுக்கெல்லாம் சினிமாவில் எப்படி ஆடினார்களோ, அதேபோல் மேடைகளில் ஆடவைத்து மகிழ்வதில் அலாதிப்பிரியர்கள். கேட்டால் சொல்கிறார்கள். நாங்கள் இசையை ரசிக்கிறோம் அதில் என்ன தவறு? பாடசாலையுடன் சுற்றுலாச் சென்றால், மேற்படிப்புக்குத் தூரநகரம் சென்றாலோ அழிந்து போகுமென இவர்கள் அஞ்சும் தூய்மையானது இந்த மன்மதராசா ஆட்டத்தில் மாசுபட்டுப் போகாதா?

இந்த நாடுகளில் வயது வந்தோர்க்கு மட்டுமென்று குறிப்பிட்ட படங்களை வெளியிடுவார்கள். இத்தனை வயதுக்குக் குறைந்தவர் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. ஒளிநாடாக்களை வாங்கமுடியாது என்று விதிக்கும் தடைகளை இந்த நாட்டு ஊடகங்கள் தாண்டுவதில்லை. இதில் எங்காவது சில இடங்களில் மீறல்கள் நடந்திருக்கின்றன. இத்தகைய படங்கள் சிறுவர்களுக்கான நேரங்களில் ஒளிபரப்பப்படுவதில்லை.

எமது தமிழ்த் தொலைக்காட்சிகளோ இந்த வரையறையைக்கூடப் பின்பற்றுவதில்லை. எல்லா நேரமும் சின்னத்திரை நாடகங்கள், சினிமாப்படங்கள், பாடல்கள் என ஓயாது ஒளிபரப்புக்கள்தான். காலையில் விருப்பத்தேர்வு முதல் மாலை இரவுவரையுமான பாடல் தேர்வுகளை 5வயது 6வயது பிள்ளைகளே கேட்கவும் அதை ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்கப்படும் கேள்விகளுக்கான விளக்கங்களும், எனது மகன் மன்மதராசா கேக்காட்டில் சாப்பிடவே மாட்டார் என்ற வழிசல்களும், உங்கடை குரலைக் கேட்டிட்டுச் சமைப்பமெண்டு வந்தனான் என்ற கொஞ்சல்களும் வீட்டில் இருக்கும் குழந்தை, துணை, உறவுகள் என்ற எவருமே நினைவில் நிற்காது ஒளித்திரையிலும், வானலையிலும் ஒலிக்கும் குரல்களுக்கு அடிமையாகி எத்தனையே குடும்பங்களின் ஆண், பெண் இருபாலரது 35ம் 40ம் தாண்டிய காதல்களால் எங்கள் இளம் தலைமுறையின் நிம்மதி எதிர்காலம் எல்லாமே சூனியமாகிக் கிடக்கிறது.

தொலைக்காட்சிக்குத் தொலைக்காட்சி போட்டி போட்டு என்னைவிடு உன்னைவிடு எனும் கணக்கில் இந்தியாவிலிருந்து இறக்கி எங்கள் இனத்துக்குத் தருகின்ற சினிமாவின் தரம் மீளாய்வு செய்யப்படுவதும், சின்னத்திரைகளின் வருகையை மட்டுப்படுத்தலிலும் எங்கள் ஊடகங்களின் ஆதாரபுள்ளிகள் அக்கறை செலுத்த வேண்டும்.

நல்ல திரைப்படங்களை, எங்களது வெளியீடுகளை அதிகம் இறக்குமதி செய்து எங்கள் மண்ணுக்குள்ளிருந்து வருகின்ற படைப்புக்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும். எமது தமிழ்த் தொலைக்காட்சிகள், வானொலிகள் எங்களது வாழ்வுப் போரை, சந்ததிப்போரை, நமது விழுமியங்களை, எதிர்கால வாழ்வுடனான போராடி வெல்லும் பலத்தைக் கொடுப்பதற்கான நிலங்களாகட்டும். இல்லை மக்கள் விரும்புவதைக் கொடுக்கிறோம் இந்தச் சினிமாவினதும், சின்னத்திரையின் வருகையுமே எங்களது அடையாளங்களைப் பேணுகிறது என்றெல்லாம் தத்துவம் பேசி எங்கள் இளையோரை, பெண்களை இருளுக்குள் தள்ளி உங்கள் உண்டியல்களின் பெருக்கத்தில் மட்டுமே கவனமாக இருப்பதினால் உங்களது பணத்தின் இலக்கையே எட்ட முடியும். எமக்கான எந்தவொரு சிறப்பையும் தந்துவிட முடியாது.

கண்கெட்ட பின் சூரிய வணக்கம் வேண்டாம். இன்றே காரியம் அதில் கவனமாக உங்கள் கவனம் திரும்பட்டும். உங்கள் தார்மீகக்கடமை எதுவென்பதை உணர்ந்து செயற்படுவது எங்களது மேன்மைக்கு உயர்வு தரும் என்பதையும் பணிவுடன் கூறிக்கொள்கிறோம்.

எழுதியவர் சாந்தி ரமேஷ் வவுனியன்

கருத்துகள் இல்லை: